Tuesday, March 21, 2017

இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி?'



''இ.எம். கலவையை வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்த முடியுமா? இதை எப்படித் தயார் செய்வது?''
ஆரோவில் பகுதியில் உள்ள இகோ-புரோ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி பதில் சொல்கிறார்.
''எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). தமிழில், 'திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையில் இருக்கும். இது, வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

50 மில்லி இ.எம். திரவத்தை, 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வந்தால்... நல்ல பலனைக் காண முடியும். இந்த இ.எம். இயற்கை உர விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்
இதை எப்படித் தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். ஒரு கிலோ வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒரு முறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில், இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.  
இ.எம். திரவத்தை மையமாக வைத்து, 5 பொருட்களைக் கலந்து 'இ.எம்.-5' என்கிற திரவமும் தயாரிக்கப்படுகிறது. இது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சண நோய்கள் மற்றும் சிலவகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையது. ஒரு கிலோ வெல்லத்தை சம பங்கு நீரில் நன்கு கரைத்துக் கொண்டு, அதில், ஒரு லிட்டர் காடி, ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40% ஆல்கஹால்), 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம். ஆகியவற்றை சேர்த்து, காற்று புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைத்தால், இ.எம்.-5 கரைசல் தயார். இதிலும் தினமும் வாயுவை வெளியேற்றி வர வேண்டும். தயாரான திரவத்தை காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம்.-5 திரவத்துடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்
(50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும் வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0413-2622469.

No comments:

Post a Comment