Tuesday, June 14, 2016

தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !

               தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக நாளொன்றுக்கு பத்து தொகுதி வீதமும் பின்பு ஐ.பி.எல் ஃபைனல் நெருங்க நெருங்க இருபது முப்பது என்று விறு விறுப்பை கூட்டியது தந்தி டி.வி. அந்த நாட்களில் என்.ஜி.வோ கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த கால வரலாறு, வாக்களிக்கும் பாணி, நிரந்தர பிரச்சினைகள், கட்சி சார்பு, சாதி, மதம் போன்ற சமூக பிரிவுகள், ஆளும் கட்சி குறித்த பார்வை, அந்தந்த வட்டார பிரச்சினைகள் என்று யோகேந்திர யாதவ் போலவே பொளந்து கட்டினார்.
இங்கே ஒரு உண்மையை பதிவு செய்வோம். தம்பி அருண் கிருஷ்ணமூர்த்தி, தந்தி பாண்டே போல முட்டாள்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மடக்கும் புத்திசாலியான முட்டாளோ, உளறுவாயரோ, கத்துபவரோ இல்லை. கண்டிப்பாக தான் சொல்வது முழு உண்மைதான் என்று நம்பவைக்ககூடிய ‘புத்திசாலி’தான். ஒரு முதலாளித்துவக் கல்வியின் அதிகபட்ச சாத்தியங்களோடு கொட்டிக் கிடக்கும் விவரங்களை பல்வேறு காம்பினேஷ்ன்களில் கூட்டிக் கழித்து வகுத்து பெருக்கி குறைந்த பட்சமாக கூட மக்களின் வாக்களிக்கும் திசையை யூகித்து சொல்லமுடியும் என்பதற்கேற்ப அவர் முயற்சி செய்கிறார். எனினும் இதை ஏதோ கணித சூத்திரம் போல மக்களின் மனங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டும் என்பதல்ல. அதனால்தான் இதை குறைந்த பட்சம் என்கிறோம்.
அநீதிகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ‘நீதியாக’ முன்வைப்பது பாண்டேயின் உத்தி என்றால் அதே ‘நீதியை’ சமூகப் பொருளாதார விவரங்களாக மாற்றுவது அருண் கிருஷ்ணமூர்த்தியின் உத்தி.
இதில் அருண் கிருஷ்ணமூர்த்தி தொகுதி வாரியாக விளக்கமளிக்கும் போது குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தோல்வி குறித்த பாண்டேவின் குறுக்கீடு அ.தி.மு.கவின் சாணக்கியத்தனமாகவோ இல்லை தி.மு.கவின் பரிதாபமான நிலையாகவோ புரிந்து கொள்ளலாமா என்று இருக்கும். ஆனால் அருண் கிருஷ்ணமூர்த்தி அப்படி விளக்குவதில்லை. அதே நேரம் முதலாளியான பாண்டேவின் மனம் புண்படக்கூடாது என்பதால் தலையாட்டிக் கொண்டு அமைதியாகி விடுகிறார். மேலும் இதில் அவர் சமரசமாக நடந்து கொள்வதில்லை பாண்டே போலவே நடந்து கொள்கிறார் என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. இதுதான் வேறுபாடு.
தந்தி டி.வி-யின் கருத்துக் கணிப்பு துல்லியமாக வெற்றி பெற்றிருப்பதாக இலையடிமை புதிய தலைமுறை மாலன் பாண்டேவுக்கு பாராட்டு மழை பொழிகிறார். ஆங்கில ஊடகங்கள் அஞ்சிய தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பை தைரியமாக ஏற்றுக் கொண்டு சரியாக கணித்திருப்பதாக தந்தி டி.வி பாண்டே மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களின் குழுவினருக்கு மாலன் பாராட்டுவது ஒரு அறிவுத் துறை சாதனையை பார்த்து வியந்து அல்ல. சாமர்த்தியமாக அ.தி.மு.க வெற்றியை கணித்திருக்கும் அந்த ‘திறமை’ மாலனது சொந்த மகிழ்ச்சிக்குரியது.
இனி இந்த கருத்துக் கணிப்பின் மோசடிக்கு வருவோம்.
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் என இருமுனைப் போட்டிதான் பிரதானம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவு தேவையில்லை. மூன்றாவது அணி அ.தி.மு.கவின் பி டீம் என்பதாலாயே தந்தி புதிய தலைமுறை, குமுதம், தினமணி, தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் புரட்சி அண்ணிக்கு பெரிய கவரேஜ் கொடுத்தன. அடுத்து ஆளும் கட்சியை எதிர்த்து இங்கே எதிர்க்கட்சிகளோ இல்லை எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை வைத்து  ஆளும் கட்சியோ கூட்டணி அமைக்கவில்லை என்பதாலும் இங்கே அ.தி.மு.கவுக்கு ஆதாயம் என்பதை அறிவதற்கு பெரிய அல்லது சிறிய அறிவு தேவையில்லை.
விஜயகாந்தின் முடிவுக்கு தி.மு.க காத்திருந்ததைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருந்தார். தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணிக்கு போனதால் தி.மு.கவுக்கு கிடைத்த பாதகத்தை விட அ.தி.மு.கிற்கு கிடைத்த சாதகம் அதிகம். இந்நிலையில் தொகுதிகளுக்கு போகிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி.
போனவர் மேற்கண்டவாறு அந்தந்த தொகுதிகளின் சமூக, பொருளாதார நிலைமைகளை அலசி ஆராய்கிறார். அந்த அலசலை தொகுத்து யாருக்கு வெற்றி, தோல்வி, இழுபறியா என்று முன்வைக்கிறார். இதுதான் நிரூபணமாயிருக்கிறது என்று பாண்டேவும், அருணும் குதுகலிக்கிறார்கள். எனினும் அ.தி.மு.கதான் அசுரப் பெரும்பான்மை பெறும் என்று அவர்கள் சொல்லவில்லை. அ.தி.மு.கவிற்கு  மார்ஜின் பெரும்பான்மை  எனுமளவுக்கு இடங்கள், தி.மு.கவிற்கு பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்கள், மீதி இழுபறி என்று நின்றார்கள்.
இதுவரை பார்த்த விசயங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரியும். இதற்கு மேல் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான விசயம் – அதன் அளவை ஜெயலலிதா மட்டும்தான் முடிவு செய்தார். அது பணம். எந்தெந்த தொகுதி பலவீனம், அவைகளுக்கு எவ்வளவு பணம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு எவ்வளவு பணம், இது போக அந்தந்த தொகுதிகளின் அமைச்சர் வேட்பாளர்கள் அள்ளி விடும் பணம் – இவை குறித்து நமது மேதகு அருண் கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவே இல்லை. இவையெல்லாம் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தாதா யுவர் ஆனார்?
தேர்தல் அரசியல் தமது வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதைப் போலவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கண நேர வேலைக்கு பணத்தை வைத்து முடிவு செய்வதும் மக்களிடையே நிலைபெற்றுவிட்டது. அ.தி.மு.க அளவு இல்லாவிட்டாலும் தி.மு.கவிலும் வேட்பாளர்களைப் பொறுத்து பணம் வினியோகித்ததாக நக்கீரன் இதழே தெரிவிக்கிறது. அ.தி.மு.க மையப்படுத்தப்பட்ட அளவின் பண வினியோகத்தை செய்திருக்கிறது. தி.மு.க அப்படி செய்யவில்லை என்றாலும் அந்தந்த வேட்பாளர்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப அதை ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
இதனால் தமிழக மக்கள் அனைவரும் பணத்திற்கு சோரம் போனார்கள் என்பதல்ல. 78% வாக்குகளில் முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதம் வரை வெற்றிக்கு போதுமானது. அதிலும் மும்முனை நாற்முனைப் போட்டி என்றால் வெற்றி சதவீதம் இன்னும் குறையும். இந்நிலையில் வெற்றி தோல்வியின் இடைவெளி என்பது 1 முதல் ஐந்து சதவீதம் என்றால் மொத்த தொகுதி மக்களில் அதாவது வாக்களிப்போரில் அதிகபட்சம் 20 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்தால் போதுமானது. அடுத்து இந்த பணத்தை அந்தந்த தொகுதிகளில் எந்தந்த பொருளாதார பிரிவினர், சாதியினர், ஆண், பெண் என்று முடிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரங்களின் படி அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் வாக்கு வித்தியாசம் மூன்றிலிருந்து நான்கு சதவீதங்களுக்குள் இருக்கிறது.
தி.மு.க-விற்கு 38 என்ற அளவிலும், அ.தி.மு.க-விற்கு 42 என்ற அளவிலும் வாக்கு சதவீதம்  இருப்பதால் மீதம் இருபது சதவீதம் மற்ற கட்சிகளுக்கு போய்விட்ட படியால் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த நான்கு சதவீத வாக்குகளையும் உள்ளடக்கி இருபது சதவீத வாக்குகளுக்கு குறி வைத்தால் போதும். அ.தி.மு.கவைப் பொறுத்த வரை இது முப்பதாகவும் இருக்கும். இத்தகைய நாற்முனைப் போட்டியில் சிதறும் வாக்குகளால் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு குறைந்தால் அது வெற்றியைக் குறிவைத்து வீசப்படும் பணத்தின் இலக்கை கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாகவே இருக்கும். ஆகவே பணம்தான் இந்த வெற்றியின் அடிப்படை என்பது வெள்ளிடை மலை.
அடுத்து அம்மா ஆட்சி நடைபெறும் காலத்தில், அம்மாவின் தேர்தல் ஆணையமே நீதிபதியாக இருக்கும் நேரத்தில் அ.தி.மு.கவினர் இதை திட்டமிட்டும், வெளிப்படையாகவும் செய்திருக்கிறார்கள். தி.மு.கவினரோ கொஞ்சம் பயந்து பயந்து செய்திருக்கிறார்கள். இது போக பல கிராமங்களில் மக்களே முடிவு செய்து ஊர் பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் தடுக்க நினைத்த தி.மு.கவினரை விரட்டியும் இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த உண்மைகளை நேரடி அறிக்கையாக தருகிறோம்.
இப்போது அருண் கிருஷ்ணமூர்த்தி தனது ஆய்வுகளில் இந்த அம்சத்தை புறக்கணித்திருப்பார் என்றா கருதுகிறீர்கள்? நிச்சயம் இல்லை. இல்லை பாண்டேவுக்கு இது தெரியாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் தந்தி நிர்வாகம் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதால் மன்னிக்கவும் அடிமையாக இருப்பதால் இந்த பண வினியோகம் எவ்வளவு இருக்கும், எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புள்ளிவிவரங்களாகவே வந்து கொட்டியிருக்கவும் கூடும்.
ஆக மேற்கண்ட சமூக நிலைமைகளை ஆய்வும் செய்யும் அறிஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி இந்தவைட்டமின் ப குறித்தும் நிச்சயம் ஆய்வு செய்திருப்பார். ஒரு வேளை இந்த வைட்டமின் ஊழலுக்கு மக்கள் எவ்வளவு பலியாகியிருப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்று ஒரு குழப்பம் வரலாம். நல்லது, நேரடி விசாரிப்பில் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர்களிடம் இது குறித்து கேட்டால் முடிந்தது விசயம். இது போக பொதுவான அரசியல் சூழலிலேய ஊடகங்கள், நீதிமன்றம், போலீசு என அனைத்தும் ஊழல்மயமாக மாறியிருக்கும் போது மக்களில் கணிசமான பேரும் பணத்தை வைத்து ஓட்டுப் போடமாட்டார்கள் என்று முடிவு செய்யும் நிலைமை தமிழகத்தில் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் போது பாண்டேவுக்கு மட்டும் தெரியாதா என்ன?
தற்போதைய நிலவரப்படி தி.மு.க நூறையும், அ.தி.மு.க நூற்றி முப்பதையும் எட்டி விட்டிருக்கிறது. இதன்படி அ.தி.மு.க பணத்தை அள்ளி வீசிய அளவிற்கு வெற்றி கிடைக்க வில்லை என்பதும் நிச்சயம். இதனால்தான் பாண்டே அருண் குழுவினர் கருத்துக் கணிப்பின் போது கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கிரிமினாலாஜியில் தோய்ந்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள்! அதே நேரம் பணம் வாங்காத மக்களும் அரசியல் ஆய்வுகளோடு வாக்களிக்கிறார்கள் என்றால் அதுவும் அப்படி முழுமையாக நடப்பதில்லை.
சென்னையில் ஐ.டி நண்பர்களிடம் விசாரித்த போது படித்தவர்கள் வாக்களிக்கும் கதையைக் கேட்டால் மயக்கமே வரும். ஒரு நண்பர் குழு சீமானுக்கு வாக்களிப்பாதாக கூறினார்கள். சீமானின் கொள்கை என்ன என்று கேட்டால் தெரியவில்லை ஆனார் புதியவர் என்றார்கள். இறுதியில் தேர்தல் அன்று ஒரு நண்பரின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் வாக்களிக்க இயலாது என்றார்கள். தரைத்தள வீடும் பொருட்களும் முழுகியவர் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்களித்தார். ஏனென்றால் எல்லாத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துத்தான் பழக்கம் என்றார். தி.மு.கவிற்கு வாக்களித்தாக சொன்னவர் சிலரும் இதையே கூறினார்கள். அதாவது இவையெல்லாம் ஒரு பழக்கம். இவை விடுத்து கொள்கை அடிப்படையில் வாக்களிப்போரின் சதவீதம் ஐந்து முதல் பத்திற்குள் இருந்தால் மிக அதிகம்.
சாரமாகப் பார்த்தால் நமது மக்கள், தேர்தலை கொள்கை, அரசியல், மாற்றம், பொருளாதாரம், உரிமை, ஜனநாயகம் போன்றவற்றில் இருந்து பார்த்து அலசி வாக்களிப்பதில்லை. கற்பனையாக அப்படி ஒரு நிலை வந்தால் கருத்துக் கணிப்புகள் இப்போது போல சுலபமாக நடத்த முடியாது. எனவே ஏழைகளாகவும், அரசியல் தற்குறிகளாவும், அடிமைகளாவும் வாழும் தமிழக மக்களிடம் பணம் எனும் காரணம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதறிய நாசா விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை.
தந்தி டி.விக்காக கருத்துக் கணிப்பு எடுத்த அருண் கிருஷ்ணமூர்த்தி தமிழக மக்களிடம் பணம் குறிப்பாக அ.தி.மு.க பணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துவிட்டு அதிலிருந்து முடிவுகள் எடுத்துக் கொண்டே தனது மதிப்பீட்டை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் விளக்கமளிக்கும் போது வைட்டமின் ப வை பேசாமல் வேட்பாளர் பலம், சாதி, மதம், பொருளாதாரம் போன்ற டீசன்டான விசயங்களை முன்வைத்தார். கள்ளச்சிரிப்புடன் அதை ஆமோதிக்கும் பாண்டேவுக்கும் தெரியும் – பணம்தான் ரிசல்ட் என்று!

பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?


தனியார் பள்ளியால் முடியாததைச் செய்த அரசு பள்ளி!
தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
“ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன.”
கல்வி, வாங்கி-விற்கும்-பண்டமாக மாற்றப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் வக்கிரக் கொள்ளையை நமது பிள்ளைகள் அன்றாடம் அனுபவித்து வருவது கண்கூடு. ‘அரசு பள்ளிகள் என்றால் கேவலமானது; குடும்பத்தின் கெளரவம் பாதிக்கும்’ எனும் மட்டமான மனநிலையை மக்கள் மத்தியில் தனியார்மயம் ஒரு பண்பாட்டுத் தாக்குதலாகவே புகுத்தியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளியால் செய்யமுடியாத ஒன்றை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருக்கிறது.
தனியார் பள்ளியால் மக்குத்தடி என்று விரட்டியடிக்கப்பட ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறது இப்பள்ளி. இன்றைய நிலையில் நூறு சதம் தேர்ச்சி எனும் பெயரில் தனியார் பள்ளிகள் பிளக்ஸ் போர்டு பேனர் வைத்து மக்களிடம் நூதனமாக திருடி வருகின்றன. ஆனால் இந்த திருட்டிற்கு பின்னே ஒன்பதாம் வகுப்பிலேயே மெதுவாக கற்கும் மாணவர்களை கழித்துக்கட்டுவது, உறைவிடபள்ளி என்று பல இலட்சங்களை பிடுங்குகிற போக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியரின் நேர்காணலைக் கவனியுங்கள்: “ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களைப் புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறையாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச்செய்யலாம்.” (தி இந்து தமிழ், 27-05-016)
பள்ளியின் நோக்கம் என்ன? ஆசிரியரின் நோக்கம் என்ன? என்பதை இந்த நேர்காணல் தெளிவாகக் காட்டுவதுடன் இலாபம் பார்த்து, கல்வி எனும் சரக்கை விற்கும் தனியார் பள்ளிகள் எப்படி சமூகத்தின் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்க வன்னிவேலம்பட்டி பகுதிவாழ் இளைஞர்கள் உதவியிருப்பதும் நமது கவனத்திற்கு வருகிறது. மாறாக நாமக்கல், பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு மதிப்பெண் பெறவைக்க ஆசிரியரே தேர்வு அறையில் வாட்ஸ் அப் வைத்துக்கொண்டு விடைகளை சொல்லியது செய்திகளில் அம்பலப்பட்டது நினைவிருக்கலாம்.
சட்டபூர்வமற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இருப்பை நியாயப்படுத்த நடுத்தரவர்க்க கனவான்கள் அரசு பள்ளி மீது கொட்டும் பல்வேறு அவதூறுகள் கிண்டல்களை நடைமுறையில் இரத்து செய்திருக்கிறது வன்னிவேலம் பட்டி அரசு பள்ளி!
பெற்றோர்களின் மோகமும் அரசு பள்ளி சாதனையும்!
தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த கையோடு நாமக்கல், ஊத்தங்கரை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தொண்ணாந்து கொண்டு காத்திருந்ததை செய்திகள் பரபரப்புடன் வெளியிட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளுடன் படையெடுத்த பெற்றோர்கள் சொல்லும் முதற்காரணம் இங்கு படித்தால் மருத்துவ சீட்டு கிடைப்பது உறுதியாம். அதற்காக உறைவிடப் பள்ளி எனும் முறையில் இங்கு செயல்படும் பல தனியார்பள்ளிகள் இரண்டு வருட கொடுமைக்கு பிள்ளைகளை உட்படுத்துகின்றனர். பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தாமலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தும் அப்பட்டமான மோசடி இங்கு நடைபெற்றுவருகிறது! இத்தகைய உறைவிட பள்ளிக்கு பல இலட்சங்களை கந்துவட்டிக்கு வாங்கி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணயம் வைக்கின்றனர்.
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார். இவரது குடும்பம் சென்னையில் இருந்தாலும் மகளின் படிப்பிற்காக ஊத்தங்கரையில் தனியாக வீடு எடுத்து தங்கி ஊத்தங்கரையில் தாயும் பிள்ளையும் சென்னையில் தகப்பனும் என்று கல்வி வாசம் செய்திருக்கின்றனர். நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே காணப்படும் மனநிலையின் ஒருவகைப்பாடு இது.
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
மறுபுறத்தில் தன் பிள்ளையின் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட தாயைப் பற்றிய செய்தி இந்தாண்டு வெளிவந்திருக்கிறது. பள்ளி மாணவ மாணவிகள் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க பெற்றோர்களே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு பாசம், கண்காணிப்பு எனும் பெயரில் பெற்றோர்களின் வக்கிரமான நுகர்வு மனநிலையைத் தான் காட்டுகிறதேயன்றி வேறல்ல!
இந்த இரு எதிர் எதிர் முனைகளுக்கு மத்தியில் புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப்பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளில் 14 மருத்துவ மாணவர்களை உருவாக்கியிருக்கிறது எனும் செய்தி தி இந்து தமிழ் நாளிதழில் 06-06-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இச்செய்தி கட்டியம் கூறுகிறது. இங்கு பெற்றோர்களின் மனநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் தான் சிறந்தது என்று கருதும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளை இதற்கு ஒரு துருப்புச் சீட்டாக என்ன விலை கொடுத்தாவது அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைப்பது மலம் என்று தெரிந்தும் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் அறிவாளியின் கதையையே நமக்கு நினைவூட்டுகிறது.
இதில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுப் பள்ளிகளை வேண்டுமென்றே சீர்கெட அனுமதிக்கிற அரசு இருக்கிற இந்நாட்டில், இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர் இழைகளை வைத்துக் கொண்டு சிறந்த மாணவர்களை புதுக்கோட்டை கொத்தமங்கலம் போன்ற அரசுப் பள்ளிகள் உருவாக்குகிறது என்றால் மக்களாகிய நாம் என்ன செய்திருக்க வேண்டும்?
சாமியானா பந்தலில் இரவு முழுவதும் நாமக்கல் பள்ளிகளில் அட்மிசனுக்காக கால்கடுக்கும் வெட்கங்கெட்ட வேலையைச் செய்யாமல் வீட்டுக்கொரு நபராய் அருகில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்துவதில் போராடியிருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?
பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்களின் தலைமையில் அமைய வேண்டும்
மக்களின் மனநிலையைச் சுரண்டி தனியார் பள்ளிகள் எவ்விதம் ஆளும் அதிகார வர்க்க உறுப்புகளை வளைத்துப்போட்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தேர்தலில் பணப்பட்டுவாடா பண்ணுவதற்கு நம்பிக்கைக்குரிய கேந்திரமாக செயல்பட்டிருக்கிறது! தேர்தல் ஆணையம் நடத்திய கண்ணாமூச்சி ரெய்டிலேயே 245 தங்கக் காசுகளும் 3.40 கோடி ரொக்கப்பணமும் சிக்கியிருக்கிறது! தங்க நாணயங்கள் செண்டம் எடுக்க உதவிய ஆசிரியர்களுக்கான ‘நாணய’ப்பரிசு என்று கூறி தங்க நாணயங்களை மீட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்! சிக்கிய பணத்தின் மீது விசாரணை ஏதும் இல்லை!
வெள்ளத்தைக் காட்டி பள்ளிகளை மூட வேலை செய்த பாசிச ஜெயா கும்பல்!
government-model-school-saidapet
வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன
அரசின் செயலற்ற தன்மையாலும் தனியார்மய ஆக்ரமிப்பாலும் சென்னை மக்கள் சூறையாடப்பட்டதை எடுத்துக்காட்டியது சென்ற வருட வெள்ளப்பெருக்கு. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடியோடு இழந்தனர் என்கிற பொழுது இதில் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சென்னை கொருக்குப்பேட்டை பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா 1166 மதிப்பெண்களையும் சி.ஐ.டி நகர் மற்றும் மடுவன் கரை அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, ராமலெட்சுமி ஆகியோர் 1157 மதிப்பெண்களையும் சைதாப்பேட்டை, கோயம்பேடு, புல்லா அவென்யு அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் 1155 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லாம் மீனவர், தையல் தொழிலாளி, கார் ஓட்டுபவர், தனியார் செக்யுரிட்டி, வீட்டு வேலை செய்பவர் என்று உழைக்கும் வர்க்கமாக உதிரித் தொழிலாளிகளாக இருக்கின்றனர்.
நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படும் பொழுது குன்றிலிட்ட விளக்காக ஒளிர்வதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் காதோடு காது வைத்தார்போல் சென்னை வெள்ளத்தைக் காரணம் காட்டி அம்மா கும்பல் பல அரசுப் பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு பலவேலைகளை செய்திருந்ததை 01-01-2016 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது.
நாம் ‘அருகாமை பள்ளிகள் வேண்டும்’ ‘பொதுபள்ளிகள் வேண்டும்’ என்று போராடுகிற பொழுது வெள்ளம் வருவதற்கு முன்பாகவே சென்னை மாநகராட்சி, மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி பல பள்ளிகளை மூட திட்டம் போட்டிருந்தது. 1999-லிருந்து 2011வரை இத்திட்டத்தின் கீழ் 25 மாணவர்களுக்கு குறைவான 56 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 2009-ல் (தி.மு.க ஆட்சி) 30 பள்ளிகளை மூட எத்தனித்த பொழுது மக்களின் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை பின்வாங்கப்பட்டது. ஆனால் 2016-ல் பள்ளிகளை மூடிய எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று சொல்வதன் பின்னணியில் வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.
தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சாதித்த மாநகராட்சி பள்ளி மாணவிகள்
அ.தி.மு.க கும்பல் மீட்புப்பணிகளை செய்யவில்லை என்பது மட்டுமல்ல மக்களுக்கு எதிர்நிலையாக, அடிபட்டவன் மயக்கநிலையில் இருக்கும் பொழுது பர்ஸ் அடிக்கும் பிக்பாட்டைப் போல வெள்ளத்தைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடியும் இருக்கிறார்கள்.
இப்பொழுது அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை என்று வியக்கிற பொழுது, நமது அடிப்படை உரிமையான பள்ளிகளே போயிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அறுக்கமாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு அறுவாள் என்ற கதையாக பள்ளிகளைத் தொலைத்த மக்கள், ஆட்சியை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போட்டார்களாம்!
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் கதைக்கு மீண்டும் திரும்புவோம். ஆர்த்தியின் பெற்றோர் தன் மகள் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக ஊத்தங்கரையில் வீடு பார்த்து, வித்யா மந்திர் பள்ளியில் படித்து 1195 மதிப்பெண்கள் வாங்கியாயிற்று. ஆனால் மருத்துவக் கனவு நனவு என்று பெற்றோர்கள் நினைக்கும் பொழுது உச்சநீதி மன்றம் மருத்துவத்திற்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று குண்டைப் போட்டிருக்கிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை ஒரு தீர்ப்பால் கழிவறையில் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆர்த்தி போன்ற உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் உடனடியாக பொதுநுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுக்க இன்னொரு நாமக்கல்லை கேரளாவில் தேடுகின்றனர். ஆனால் மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கும் அரசின் களவாணித்தனத்தை அறியாமல் இருக்கின்றனர். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றனர்.
abhiya
மலையாளப் பாடத்தில் முதலிடம் பெற்ற டீக்கடை தொழிலாளியின் மகள் அபியா
மோடி பதவியேற்றவுடனேயே செய்த முதல் வேலை தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை மூடுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தியதாகும். இதனால் பல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாவது வேண்டுமென்றே தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்றது. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இத்துணைக்கும் தொழிலாளிகளின் வியர்வையால் பி.எப் பணத்தால் விளைந்தவையாகும். என மகன் மகளுக்கு மருத்துவச் சீட்டு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற எந்தப் பெற்றோரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
தொழிலாளிகளை ஆதரித்து வர்க்க உணர்வாக குரல் எழும்பினால் தான் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மக்களிடையே அந்தக் குரல் எழவில்லை என்பது தொழிலாளிகளை காவு கொடுத்தது மட்டுமின்றி பொதுசுகாதாரம் போய் தனது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாய் நின்றிருக்கிறது. அதாவது அரசுக்கும் நமக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டி மருத்துவச்சீட்டிற்கானதல்ல. மக்களின் அதிகாரத்திற்கானது. உழைக்கும் மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதன் மூலமாகத்தான் மருத்துவச் சீட்டு மட்டுமல்ல; நாம் உயிர் வாழ்வதற்கான நிலைமையையும் பெற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.
இதன் அடிப்படையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் ஏன் மூடப்பட வேண்டும்? என்பது அன்றைய நிலையில் பொதுதளத்திற்கு விவாதத்திற்கு வரவில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் கட்டியமைக்கப்படவில்லை. இதில் குளிர்காய்ந்த மோடி கும்பல் இந்தாண்டு மருத்துவப்படிப்பிற்கு பொதுநுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சொல்வதன் பின்னணியில் முழுக்கவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்தான் இருக்கிறது. இந்திய நாட்டை விற்கும் உலகவர்த்தக கழகம் கொண்டுவரும் காட்ஸ் ஒப்பந்தம் முன் தள்ளும் புதியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் மூலமாக நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்த்து காசு இருப்பவனுக்கு கல்வி என்று மாற்றுகிறார்கள்.
எனக்கு ஏகாதிபத்தியம், காட்ஸ், புதிய கல்விக்கொள்கை என்றால் என்னவென்று தெரியாது என்று பொதுமக்கள் வாதிடலாம். நியாயம் தான். அதே சமயம் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
சங்கல்ப் என்ற என்.ஜி.ஓ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. ஒரே நுழைவுத்தேர்வு ஒரே இந்தியா என்று பார்ப்பன சங்கப்பரிவாரக் கும்பல் தலைநகரில் கூச்சல் போடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தாவே யாருடைய தரப்பு வாதத்திற்கும் செவிமடுக்காமல் ஒரே நுழைவுத்தேர்வு என்று தீர்ப்பளிக்கிறார். மேல்முறையீட்டை நிராகரிக்கிறார். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் எனும் வாதத்தை நிராகரிக்கிறார். இந்தியாவின் கல்விச் சூழல் பாரதூரமாக அசமத்துவமாக இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு என்பது அநீதி என்று வாதமும் நிராகரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அனில்.ஆர்.தாவே மனுஸ்மிருதியிலிருந்து அடிக்கடி கோட் செய்து தீர்ப்பளிப்பவர். ஆக தாவே யார் என்று நமக்கு தெரிவதில் சிக்கலில்லை. காட்ஸின் நோக்கங்கள் இவரைப்போன்ற நீதிபதிகளை வைத்து எல்லா தரப்பையும் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வராமலேயே சொடுக்குபோட்டு நிறைவேற்றப்படுகிறது. மக்கள் தேர்தலைப்போலவே, தேர்வு திறமை எனும் வட்டத்தைத் தாண்டி தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியாமல் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
நமது நாட்டு மருத்துவக் கல்வி பகற்கொள்ளையாக போகிறதே என்று யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. கடைசியில் திறமை, சாதி, தாய்மொழி என்று உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதை ஆளும் வர்க்கம் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. JEE நுழைவுத் தேர்வு நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளே வரவிடாமல் தடுக்கும் வண்ணம் இரு அடுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வை விட 42 மடங்கு கடினம் என்பது திறமை மற்றும் சிந்தித்தல் என்பதன் அடிப்படையில் அல்ல! கல்விசார் செயல்பாடுகள் மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்தல் (Non accessibility) என்பதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது முழுக்கவும் மோசடியாகும்.
சான்றாக மாநில வழிக்கல்வியில் 1165 மதிப்பெண் எடுக்கிறவர் JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பது அவரது திறமையை மதிப்பிடுவதாக அமையாது. ஏனெனில் JEE பயிற்சி என்பது 250 ஸ்ட்ராக்களை வாயில் திணித்து லிம்கா சாதனை, மயிரைக் கொண்டு காரை இழுத்தல், ஆயிரம் பச்சை மிளகாய்களை உண்டு சாதனை போன்ற அர்த்தமற்ற, பொருளற்ற சாதனைத் தேர்வுகளாகும். 1165 தேர்வு முறையும் அப்படிப்பட்டதுதான் என்றாலும் JEE நிராகரித்தலை அடிப்படையாகக் கொண்டது. இதில் மாணவர்களை ஈடுபடச் சொல்வது என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். ஏனெனில் என்ன காரணத்திற்காக ஐ.ஐ.டி ஆரம்பிக்கப்பட்டதோ அதற்காகவே முதலில் அது இல்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொறியியல் தொழில்நுட்பம் தேவை என்று ஐ.ஐ.டிக்கள் அமெரிக்க எம்.ஐ.டி மாடலில் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்திய கட்டமைப்பிற்கு ஐ.ஐ.டிக்கள் எந்தப் பங்கும் ஆற்றியதில்லை. இப்பொழுதுவரை ஐ.ஐ.டிக்கள் ஏகாதிபத்திய நலன் காக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் என்றுதான் இயங்கிவருகிறது.
ஆனால் நமது பார்வையின் படி உழைக்கும் மக்களின் தலைமையில் நாம் இந்தியாவைக் கட்டியமைக்கிற பொழுது உற்பத்தியில் நமக்கு இருக்கும் சவால்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் கட்டமைப்பை சடுதியில் மேம்படுத்த மிக அவசியமாகும். அப்பொழுது ஐ.ஐ.டிக்கள் ஜரூராக வேலையில் இறங்கும் பொருட்டு பலதிசைகளிலும் முடுக்கி விடப்படும். இதற்கு நமக்கு உண்மையில் நாட்டின் மொத்த இளைஞர் பட்டாளமும் தேவை. இவர்களுக்கு அறிவு ஊட்டும் வேலையைச் செய்வது இன்றியமையாததும் தவிர்க்க இயலாததுமான புரட்சிகர இயக்கங்களின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். நாம் அப்பொழுதும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம். அப்பொழுது நமது தேர்வு முறை நிராகரித்தல் என்பதன் அடிப்படையில் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் என்பதன் அடிப்படையில் இருக்கும். இதற்கு JEE போன்ற பித்தலாட்டமான பாசங்கான உதவாக்கரை தேர்வு முறைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
ஐ.ஐ.டிக்கள் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று பல உப்புமா கல்லூரிகள் படையெடுத்து வருவதை நாம் காண்கிறோம். பெற்றோர்கள் தன் பிள்ளை இஞ்சினியர் என்பதில் ஆர்வமாக இருந்தால் தமிழ்நாட்டில் நிலவும் உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 93% சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் போலி பெயரில் பேராசிரியர்கள் பணிபுரியும் மோசடி சென்ற ஆண்டு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது 93% தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே இருப்பதாக கணக்கு காட்டியிருக்கின்றன. ஆசிரியர் எனும் விசயத்திலேயே கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால் கல்லூரி கட்டமைப்பு, வசதிகள் என்பதில் எத்துணை பித்தலாட்டம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் மாநில அரசும், அதிகாரவர்க்க உறுப்புகளும் முழுக்கவும் உடந்தை.
எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி, சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது என சென்ற ஆண்டு சுயநிதி கல்லூரிகளின் அடாவடியை கணக்குப்போட்டு பாருங்கள். தற்பொழுது எஸ்.ஆர்.எம் குழுமம், இடைத்தரகர்கள் மூலமாக மாணவர்களிடம் பணம் பிடுங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
93% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் டூபாக்கூர்! இதற்கு அரசு, நீதிமன்றம், ஆளும் வர்க்க அதிகார உறுப்புகள் அத்துணையும் உடந்தை என்றால் எந்த அருகதையின் அடிப்படையில் எந்த தார்மீக கடமையின் அடிப்படையின் எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை பொறியியல் கலந்தாய்விற்கு அழைத்து செல்கிறீர்கள் என்பதற்கு பதில் சொல்லுங்கள்.
ஆக இந்தப்பதிவின் மூலமாக நம்மால் ஒரு முடிவை எட்ட இயலும்.
என் பிள்ளை மருத்துவனாக பொறியாளனாக வரவேண்டும் என்று சுயநலமாகவாவது பெற்றோர்கள் சிந்திப்பார்கள் எனில் “அரசுக்கட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது; இது அழுகி நாறிக்கிடக்கிறது; இதை தகர்த்து நமக்கான கல்வி அமைப்பைக் கட்டினால் தான், தான் ஆசைப்பட்ட கல்வி முறை நம் பிள்ளைகளுக்கு வாய்க்கப்பெறும்” என்பதை உணர்ந்து போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அரசு-கல்விநிலையங்களில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் நமது உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் குழுக்களை நிறுத்தியாக வேண்டும். அரசுப் பள்ளிகளை நமது பகுதி வாழ் மக்களைக் கொண்டு நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும்! சென்ற ஆண்டு படிப்பினைகள் மூலமாக இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலை நாம் இவ்விதம் வரையறுத்திருக்கிறோம்!

ஜெயாவின் வெற்றி சாமர்த்தியமா சதித்திட்டமா ?

             

கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க!
அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க!
ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!

மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.
jaya-victory-paid-crowd
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்ச்சாரக் கூட்டத்திற்காக கொண்டுவரப்பட்டவர்களுக்கு பகிரங்கமாக பணம் விநியோகிக்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தின் கட்டளை, விதிகளுக்கு ஜெயாவின் மரியாதை.
சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளிலிருந்து ஜெ. பெற்ற விடுதலையாக இருக்கட்டும், அல்லது சுயமரியாதை உணர்விலிருந்து தமிழ் மக்களுக்கு அவர் வழங்கியிருக்கும் ‘விடுதலை’யாக இருக்கட்டும் அனைத்துக்கும் அந்தக் காட்சி பொருந்தக் கூடியதே. மணிரத்தினத்தின் அழகியல் உணர்வைப் பாராட்டத்தான் வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் உறுதி செய்கின்றன.
தமிழக வாக்காளர்கள் தம்மைத் தாமே இருண்ட காலத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதிகார வர்க்கம், பல எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறை, வாக்காளர்கள் ஆகிய அனைவரையும், அனைத்தையும் தன்னால் விலைக்கு வாங்க முடியும் என்பதை ஜெயலலிதா பலமுறை நிரூபித்திருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அதனை மீண்டும் நிரூபித்து விட்டார். எந்தக் காரணத்துக்காக முன்னர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் (வலது கம்யூ. தவிர) புறக்கணித்தார்களோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகமாக இந்த பொதுத் தேர்தலில் தமிழகமெங்கும் தொழிற்பட்டிருக்கின்றன.
ஜனநாயகம் என்ற பெயரால் அழைக்கப்படுவதற்குத் தேவைப்படுகின்ற ஒப்பனைகளைக் கூட இந்த ‘ஜனநாயகம்’ இழந்து வருகிறது. அ.தி.மு.க.வின் கூட்டாளியாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அ.தி.மு.க.வைத் தவிர மற்றெல்லா கட்சிகளும் கூறிவிட்டன.
“நம்பிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டப்பட்டால் மரத்தடி சொம்பு நாட்டாமைகளுக்குக் கூட ரோசம் வரக்கூடும். நம்பிக்கை இல்லாத நடுவரை வைத்து பள்ளிக்கூட கால்பந்து போட்டியைக் கூட நடத்த முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் கைப்பாவை என்று அனைத்து கட்சிகளாலும் காறி உமிழப்பட்ட பின்னரும் ‘நான்தான் நடுவர்’ என்று புன்னகை மாறாமல் கூறுகிறார் லக்கானி.
jaya-victory-caption-1இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள், சிறுதாவூர் கன்டெய்னர், ஐவர் அணியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள், கரூர் அன்புநாதனின் கரன்சி கோடவுன், தமிழகம் முழுவதும் அமைச்சர்களின் பினாமிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடிகள், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் – என அடுக்கடுக்காக எழுந்த எந்தக் குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையமோ வருமான வரித்துறையோ பதிலளிக்கவில்லை.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி 60,000 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் அதிகரிக்கிறது என்றும், அதற்குக் காரணம் உங்களுக்கே தெரிந்ததுதான் என்றும் கூறுகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் வக்கற்ற நிலையை பிரகடனம் செய்கிறார், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.
அன்புநாதனுக்கு கேட்டவுடன் முன் ஜாமீன் வழங்குகிறது உயர்நீதி மன்றம். அன்புநாதன் பிடிபடக் காரணமாக இருந்த எஸ்.பி.வந்திதா பாண்டேவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் விஷ்ணுப்பிரியாவைப் போல ‘தற்கொலை’ செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.
jaya-victory-police-paying
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக போலீசு அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தொண்டனைப் போலத் தொப்பிகளை விநியோகிக்கும் காட்சி.
தேர்தல் தொடர்பான பணிகளில் ஆளும் கட்சியானது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெற்ற வெற்றியையே ரத்து செய்யலாம் என்று விதி இருந்த போதிலும், ஜெயலலிதா உரையாற்றும் மைதானங்களில் புல் புடுங்குவது முதல், ஓட்டுக்குப் பணம் கடத்துவது வரையிலான எல்லா வேலைகளையும் அதிகார வர்க்கமும் போலீசும்தான் செய்திருக்கின்றன. இன்னின்ன அதிகாரிகள் என்று ஆதாரபூர்வமாக அம்பலமான பின்னரும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவது கூடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், வருமான வரித்துறை, உள்துறை அமைச்சகம், மத்திய உளவுத்துறை, ரிசர்வு வங்கி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள் – ஆகிய எல்லா நிறுவனங்களும் கன்டெய்னரின் சந்நிதியில் கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றன. ஜெயலலிதாவின் வெற்றி என்பது இந்தக் கட்டமைப்பின் தோல்வியை முன் எப்போதையும் விட அதிகமாக பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறது.
“ஜெயலலிதாவை இனி தேர்தல் மூலம் தோற்கடிக்கவே முடியாதோ” என்ற கேள்வி எதிர்க்கட்சிகளின் மனதில் எழத்தான் செய்கிறது. இருந்த போதிலும், அந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லாத காரணத்தினால், கேள்வியை தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அப்படி ஒரு கேள்வியே எழும்பாதது போல தம்மைத் தாமே தைரியப்படுத்திக் கொள்கிறார்கள்.
jaya-victory-tasmac
தமிழ்நாட்டைக் குடிநாடாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள்.
இந்தக் கட்டமைப்பு நியாயப்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்ற போதிலும், வேறு மாற்று குறித்த சிந்தனையே எழாத வண்ணம், ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் மக்களை இந்த தேர்தல் அரசியல் வரம்புக்கு உள்ளேயே சிந்திக்கும்படி கட்டுப்படுத்துகின்றன. இருக்கின்ற நிலைமையை அங்கீகரித்து, அனுசரித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே வெவ்வேறு கோணங்களிலிருந்து மக்களுக்கு வலியுறுத்துகின்றன.
ஜெயலலிதாவின் வெற்றி சாமர்த்தியமா, சதித்திட்டமா?
தேர்தல் முடிவு குறித்து நடைபெறும் விவாதங்களைக் கவனித்துப் பாருங்கள். இந்த தேர்தலில் எல்லா விதமான கிரிமினல் வழிமுறைகளையும் பயன்படுத்தித்தான் ஜெ. கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2009-2014-இல் இந்தியா முழுவதும் உயர்ந்துள்ள வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6%. தமிழகத்தில் இது 29.1%. அதாவது 1.21 கோடி புதிய வாக்காளர்கள். இவர்களில் போலி வாக்காளர்கள் 40 இலட்சம் பேர் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், பிறகு தாம்பரம் தொகுதி போலி வாக்காளர் பட்டியலை ஆதாரத்துடன் கொடுத்து உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது போல நடித்தது ஆணயம். தமிழகம் முழுவதும் அகற்றப்பட்ட போலி வாக்காளர்கள் 6.5 லட்சம் மட்டும்தான். மீதி சுமார் 33 இலட்சம் போலி வாக்காளர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் பழைய முறைக்குப் பதிலாக வாக்காளர்களையே கைப்பற்றி விட்டார் ஜெயலலிதா. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்களித்தவர்களின் கையில் வைக்கப்படும் மை, வைத்தவுடன் அழிந்து கள்ள ஓட்டு சதியை அம்பலமாக்கியிருக்கிறது. இத்தனை அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாக அரங்கேறிய
போதிலும், ஜெயலலிதாவின் இந்த முறைகேடான வெற்றியை எந்த ஊடகமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
jaya-victory-caption-2தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட ஊடகத் தரகர்கள், தேர்தல் முடிவு குறித்த ஆய்வை ஐ.பி.எல்.ஆட்டம் குறித்த ஆய்வு போல மாற்றுகிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தியதையம், விலைக்கு வாங்கியதையும், ஆதிக்க சாதி ஓட்டுக்களை அறுவடை செய்ததையும், மோசடி வாக்குறுதிகள் மற்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்ததையும் அவரது திறமைகளாக காட்டுகிறார்கள். “எப்படி வியூகம் அமைத்திருந்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று விவாதம் நடத்துகிறார்கள். தேர்தல் என்பதே ஒரு விளையாட்டு போலவும், அதில் சாமர்த்தியமாக ஆடி ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டதாகவும், சாமர்த்தியக் குறைவான தி.மு.க.வும் மற்ற கட்சியினரும் தோற்றுவிட்டதாகவும் காட்டுகிறார்கள்.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பா?
ஜெ.பெற்ற வாக்குகளில் உண்மை எத்தனை, போலி எத்தனை என்பது ஒரு புறமிருக்கட்டும். 5 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியைப் பரிசீலித்து எடை போட்டு அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்களித்திருக்கிறார்களா?
2011-இல் ஆட்சிக்கு வந்தவுடனே மின் வாரியம் கடனில் மூழ்கி இருப்பதாக சொல்லி ஜெ.மின் கட்டணத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் கடன் பன்மடங்கு உயர்ந்துவிட்டதே, ஏன் என்று மக்களுக்குத் தெரியுமா? தற்போது 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாரே, இதன் சாத்தியம் குறித்து பரிசீலித்துத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா? “மின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது” என்று 2011-இல் கட்டணத்தை உயர்த்தியபோது ஜெயலலிதா கூறினாரே, அதை யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா?
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேருந்து சேவை சீர்குலைந்திருக்கிறது.பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் 25 ரூபாய் என்று குறைக்கப் போவதாக கூறுகிறார் ஜெ. ஆனால் தனியார் முதலாளிகளோ பால் விலையை உயர்த்துகிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆறாயிரமாகியது. இப்போது அவற்றில் 500 கடைகளை மூடப்போவதாக ஜெ.வாக்குறுதி அளிக்கிறார். இவை பற்றியெல்லாம் மக்களுடைய புரிதல் என்ன? கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் யோக்கியதை இது எனும்போது, அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா?
சொற்களால் அதிகாரத்தை நக்கும் தொலைக்காட்சி நெறியாளர்கள்!
jaya-victory-caption-3ஐந்தாண்டு கால ஆட்சியின் சரி -தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று கருதுவது, பொதுப்படையான ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. மேற்கண்ட கேள்விகளை மக்கள் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, இப்படி கேள்வி எழுப்பி பரிசீலிக்க விடாமல் தடுப்பதற்கும், பல்வேறு கோணங்களில் மக்களைத் திசை திருப்புவதற்கும்தான் ஊடகங்கள் வேலை செய்கின்றன. தொலைக்காட்சி நெறியாளர்கள் எனப்படுவோர், சொற்களால் அதிகாரத்தை நக்குவதை ஒரு அனிச்சைச் செயலாகவே செய்யும் வண்ணம் தமது நாவினைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.
தலித் இளைஞர்கள் படுகொலை, முத்துக்குமாரசாமி தற்கொலை, விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணம் போன்ற பிரச்சினைகளையோ அ.தி.மு.க. அமைச்சர்களின் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகளையோ, மறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, “தி.மு.க. மட்டும் யோக்கியமா” என்ற கேள்வியின் மூலம் எந்த பிரச்சினையையும் துருவி ஆராய முடியாமல் தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுப்பக்க கட்டுரையாளர்கள் என்று அழைக்கப்படும் ஊடக கூலிப்படையினர் தடுத்து விடுகின்றனர். ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தேர்தல் மோசடி பற்றி கேள்வி எழுப்பினால், உடனே திருமங்கலத்தை காட்டி அந்த வாதம் முடக்கப்படுகிறது. லஞ்ச ஊழல், அதிகார முறைகேடு ஆகிய விவகாரங்கள் எதைக் கிளப்பினாலும், ஒவ்வொன்றிலும் தி.மு.க. தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது ஒன்றே அம்மாவை விடுவிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்தப் படுகிறது.
ஜெயலலிதா விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுவிலேயே தர்க்க ரீதியாக அல்லாமல், அறிவற்ற முறையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் என்று கூறப்படும் நடுத்தர வர்க்கமே, இவ்வாறு சிந்திக்கிறது. அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனை முறையைத்தான் அது சமூகம் முழுமைக்கும் பரப்புகிறது.
பிம்பத்தை நம்ப வைக்கும் பித்தலாட்டம்
jaya-victory-degenerate-party
பொறுக்கித் திண்ணும் பிழைப்புவாதக் கூட்டத்தையும் (இடது) அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளையும் அடித்தளமாகக் கொண்டதுதான் அ.தி.மு.க.
கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்களால் உருவாக்கப்படும் பிம்பத்தின் மீது ஒரு பித்தையும் மூட நம்பிக்கையையும் ஏற்படுத்தி, “அந்த பிம்பம்தான் நான்” என்று நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி, இந்த விசயத்தில் ஒரு முன்னோடி. மாற்றம், முன்னேற்றம் என்ற அன்புமணியின் விளம்பரமாகட்டும், வழமையான அரசியல்வாதியின் தோற்றத்தை நிராகரித்து சாதாரண நடுத்தர வர்க்க மனிதனின் தோற்றத்துக்கு மாறிக் கொள்வதன் மூலம் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முனைந்த ஸ்டாலினாக இருக்கட்டும் – நுகர் பொருட்கள் குறித்து விளம்பரங்கள் தோற்றுவிக்கும் மனப்பதிவைத்தான் இவர்கள் மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மனநிலையைத்தான் வாக்குகளாக மாற்றுகிறார்கள்.
பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை, எல்லா கட்சிகளுடைய கொள்கையும் தனியார்மய – தாராளமயக் கொள்கைதான் என்பதால், விவாதம், அறிவியல் பூர்வமான ஆய்வு ஆகியவற்றிலிருந்து முடிந்தவரை மக்களை விலக்கி வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். மற்றபபடி, இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள், திட்டங்களெல்லாம் தம்மைப் பற்றி இவர்கள் தோற்றுவித்துக் கொள்ளும் பிம்பத்துக்கான பின் இணைப்புகள் மட்டுமே.
குறிப்பிட்ட பிரச்சினைகளின் பருண்மையான விவரங்களுக்குள் செல்லாமல், எம்.ஜி.யாரின் பரோபகாரம், ஜெயலலிதாவின் துணிச்சல், கருணாநிதியின் நிர்வாகத் திறன் என்பன போன்ற உருவாக்கப்பட்ட அபிப்ராயங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்தபோது “கடையை மூடும் பேச்சுக்கே இடமில்லை” என்றது ஜெ.அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்ற தி.மு.க.வின் அறிவிப்பை முதலில் கேலி செய்து விட்டு, பின்னர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் பரவத் தொடங்குவதைக் கண்டு பீதியடைந்து மூக்கறுபட்டுத்தான் “படிப்படியாக மதுவிலக்கு” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் ஜெயலலிதா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, “நான் ஒரு முடிவு எடுப்பதென்றால் ஆயிரம் முறை யோசித்துத்தான் எடுப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். படிப்படியாக மூடுவேன் என்றால் மூடுவேன்” என்று சவடாலாகப் பேசி சமாளித்தார் ஜெயலலிதா.
jaya-victory-killed-in-crowd
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து அகால மரணமடைந்தவர்கள்.
“நான் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவள்.என்னை நம்பு” என்பதற்கு மேல் ஜெயாவின் வாக்குறுதியில் வேறு எதுவும் இல்லை.இதை நம்பி வாக்களித்தவர்கள் எத்தனை சதவீதம் பேராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவர்களுடைய நம்பிக்கைக்கான அடித்தளம் எது? ஒரு பிரச்சினையைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கத் தெரியாத ஒருவன், அப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் யார் என்பதை மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க இயலுமா?
இயலாது.எனினும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேவை என்ன என்று புரிந்து கொள்ள முடிந்த மக்கள்தான் தமக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதையும் முடிவு செய்ய இயலும். “உங்களுடைய தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. அது எனக்குத்தான் தெரியும்” என்று கூறுகின்ற ஒரு பாசிஸ்டு தன்னைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அதனை உத்திரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களை விலைக்கு வாங்குகிறார். அல்லது உத்திரவாதமாக தன்னை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கூடிய போலி வாக்காளர்களை உருவாக்குகிறார். தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். இந்தச் “சாதனை”யின் முழுப்பெருமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியதல்ல. “சொந்த” மூளையைப் பயன்படுத்தி அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் இதில் பங்குண்டு.
இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கூடாது என்று உறுதியாக நம்புகின்ற ஆதிக்க சாதியினரில் கணிசமானோரும், ஜனநாயகம் என்றால் என்னவென்றே உணர்ந்திராத ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவினரும் இணைந்த ஒரு விநோதமான கலவைதான் இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி. தொழில்துறை நசிவு, விவசாயப் பாதிப்புகளுக்கு இடையிலும், கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதி தவிர மற்றெல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி, அம்மாவட்டத்தின் கவுண்டர் சாதிவெறி ஜெயலலிதாவுக்கு செலுத்தியிருக்கும் அன்புக் காணிக்கை. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும் தென்மாவட்டங்களோ தேவர் சாதிவெறியின் நிலைக்களன்கள். இந்த ஆதிக்க மனோபாவமும், ஏழைகளான உதிரி வர்க்கங்கள் மற்றும் பெண்களின் அடிமை மனோபாவமும்தான் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை தெரிவு செய்ய தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வாக்கு வங்கியின் பிடியில் தமிழகம் ஒரு பிணைக்கைதியாகச் சிக்கியிருக்கிறது.
குஜராத்தில் மோடியைத் தேர்ந்தெடுத்த இந்து மதவெறி, அதற்கு முன்னால் படேல் சாதி வெறியாக இருந்தது. உ.பி.யில் மோடிக்கு வெற்றி தேடித்தந்த இந்து மதவெறி, ஜாட் சாதிவெறியின் இன்னொரு வடிவம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, எந்த நெறியுமற்றது, ஒழுக்கமற்றது. அது கழுத்தை வெட்டும், காலிலும் விழும், கவுரமே இல்லாமல் பொறுக்கித் தின்பதற்கு முண்டியடிக்கும், பிறகு ஆண்ட பரம்பரை என்று மீசையையும் முறுக்கும்.
ஜெயலலிதாவுக்குப் பதிலாக தி.மு.க. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அது இந்த அரசியல் சமூகக் கட்டமைவின் தோல்வியை எந்த விதத்திலும் மாற்றப்போவதில்லை. மாறாக ,புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையில்தான் தி.மு.க. ஈடுபடும். ஆனால் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, தமிழ்ச்சமூகம் உள்ளுக்குள் அழுகத்தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.
அனைத்தும் தழுவிய வீழ்ச்சி!
“ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன” என்கிறது தோழர் சிவசேகரத்தின் ஒரு கவிதை வரி. ஆற்று மணல் கொள்ளையால் உள்ளூர் விவசாயம் அழிவதைக் கண்ணால் கண்டபடியே, கொள்ளையனிடம் கோயில் திருவிழாவுக்குப் பணம் வாங்குகிறார்கள் மக்கள். உடுமலை சங்கர் கொலையையும், கவுசல்யாவின் தற்கொலை முயற்சியையும் பார்த்தபடி இரக்கமே இல்லாமல் கடந்து செல்கிறது தமிழ்ச் சமூகம். முத்துக்குமாரசாமியும், விஷ்ணுப்பிரியாவும், எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகளும் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கின்றனர். பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்று அம்பலப்படுத்திய ஒப்பந்தக்காரர்கள் முகவரி இல்லாமல் போகிறார்கள். அன்புநாதனையும் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியையும் கல்லூரித் தாளாளரையும் விடுவிக்கின்றது நீதிமன்றம். கொங்கு நாட்டு கன்டெய்னர் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று நிறுவப்பட்டதைப் போல, கோகுல்ராஜ் கொலையையும், “தற்கொலை என்று நிரூபிப்பேன்” என்கிறான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் யுவராஜ்.
திரும்பிய திசையிலெல்லாம் கொடுமைகள் கூத்தாடும்போது, ஓட்டுக்குப் பணம் வாங்கிய கொடுமையைப் பற்றி மட்டும் குமுறுவது அபத்தமல்லவா?
அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டுபிடித்து, அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளி வைக்கிறது ஆணையம். ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை வெளிப்படையாக, ஊர் மக்கள் முன்னிலையில், ‘ஜனநாயக பூர்வமாக’ வழங்க வேண்டுமென்றும் உள்ளூர் கட்சிக்காரர்கள் அதில் ‘ஊழல்’ செய்ய அனுமதிக்க கூடாது என்றும் ஒரு புதிய ஒழுக்க நெறியை உருவாக்குகின்றன தமிழகத்தின் கிராமங்கள். சென்னை மாநகரின் வெள்ளம் பாதிக்கப்படாத பகுதிளைச் சேர்ந்த அபார்ட்மென்ட் நடுத்தர வர்க்கமோ கூசாமல் வெள்ள நிவாரணம் வாங்குகிறது, ஓட்டுக்கும் பணமும் வாங்குகிறது.
இது ஒரு அனைத்தும் தழுவிய வீழ்ச்சி. இந்த அரசுக் கட்டமைப்பு, இதனை நியாயப்படுத்தும் தேர்தல் ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் கொண்டிருந்த விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தகர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். “நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ரசிகப் பெருமக்களுக்கு ஐஸ்வர்யா ராய் வழங்கிய குளோசப் காட்சியின் அரசியல் மொழிபெயர்ப்புதான், வாக்காளப் பெருமக்களுக்கு ஜெயலலிதா வழங்கியிருக்கும் இந்த குளோசப் காட்சி.
பின்புறத்தைக் காட்டினால் முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம். இது முன்புறம். இந்த அவமதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது. இது திரைப்படக்காட்சி அல்ல, இதுதான் ஆட்சி.

ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை

             டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வறுமையை பயன்படுத்தி  சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
டில்லி அப்பலோவில் கைது செய்யப்பட்டவர்கள்
டில்லி அப்பல்லோவில் கைது செய்யப்பட்டவர்கள்
இக்குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வெள்ளியன்று அப்பல்லோவின்  மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர்  மற்றும் மருத்துவமனையிலிருந்த  மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. டெல்லியிலுள்ள மேலும் இரண்டு பெரிய தனியார் மருத்துமனைகள் மற்றும் அப்பல்லோவின்  சில ஊழியர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சிறுநீரக மோசடி அப்பல்லோவின் மூத்த மருத்துவர்களால் தான் நடத்தப்படுவதாகவும் தன் மகன் அதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையை உடைத்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள சைலேசின் தாயார் சுமன்லதா. இம்மோசடிக்கு பின்னால் இருப்பவர்கள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஆதித்யாவின் தந்தையோ  மருத்துவமனை உயர் அதிகாரிகளின் துணையில்லாமல் தன் மகன் செய்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அப்பலோ மருத்துவமனை
அப்பல்லோ மருத்துவமனை
இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் என்பவனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இம்மோசடி கும்பல் தமிழ்நாடு,மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வறுமையிலிருக்கும் மக்களிடம் ஆசைகாட்டி டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறது. இவர்களிடம் 2-3 லட்சம் கொடுத்து சிறுநீரகத்தை பெற்று அதை வசதி படைத்த நோயாளிகளுக்கு 25-30 லட்சங்களுக்கு விற்றிருக்கிறது. அப்பல்லோவின் மூத்த மருத்துவர்கள் இம்முறைகேடான அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார்கள்.
உறுப்பு மாற்று திசு இடமாற்று சட்டம் – 2011  சட்டவிதிகளின்படி, இறந்தவர்கள் அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறவினர்களின் ஒப்புதலுடன் உறுப்புகளை எடுக்கலாம். மாறாக உயிரோடு இருப்பவர்களிடமிருந்து எடுத்து மாற்றுவது என்றால் அதற்கு மூன்று வரையறைகளை கொடுத்துள்ளது இச்சட்டம். 1 . தானம் கொடுப்பவர் நோயாளியின் நெருங்கிய ரத்த உறவாக இருக்க வேண்டும் அல்லது 2.ஏதாவது சிறப்பான காரணங்களுக்காக நோயாளி மீது தானம் கொடுப்பவருக்கு பிணைப்பு இருக்கவேண்டும் பொருளாதார நோக்கம் இருக்க கூடாது; 3.தனிச்சிறப்பான சூழ்நிலையில் இரு நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களான தானம் கொடுப்பவர்களையும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ளலாம். அதாவது கணவருக்கு தானம் செய்ய மனைவி தாயாராக இருந்தும் சிறுநீரகம் பொருத்தமில்லாத பட்சத்தில் இதே போன்று திண்டாடும் மற்றொரு குடும்பத்தினரும் இவரும் இடம் மாறி தானம் செய்யலாம்.
சைலேசின் குடும்ப உறுப்பினர்
சைலேசின் குடும்ப உறுப்பினர்
மேற்கண்ட விதிமுறைகளை உறுதி செய்த பிறகே சம்பந்தப்பட்ட மருத்துவமனை உறுப்புகளை மாற்ற வேண்டும்.இதற்காக மருத்துவமனைகள்  அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அல்லாதவர்களை கொண்ட இரண்டு கமிட்டிகள் அமைத்து மொத்த நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது சட்டவிதி.
ஆனால் அப்பல்லோ மோசடியில் சிறுநீரகம் பிடுங்கப்பட்டவர்களையும் வாங்கியவர்களையும் உறவினர்களாக சித்தரிக்கும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து மேற்கண்ட சட்டவிதிகளை மீறியுள்ளது இக்கொள்ளை கும்பல்.  இவ்வாவணங்களை சரிபார்க்க வேண்டிய அப்பல்லோவின் மூன்று மருத்துவர் கொண்ட குழுவோ இப்போலி ஆவணங்களை ஏற்றுக்கொண்டு உறுப்பு மாற்றுக்கு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை பரிசோதித்ததில் சிறுநீரகம் வாங்கியவர்களின் முகவரிகள் சில போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை முறைப்படுத்தும் நோக்கில்  கடந்த நவம்பர் முதல் “உறுப்பு மற்றும் திசு தானத்திற்கான தேசிய பதிவேடு” ஆரம்பிக்கப்பட்டு அதன் வழியாக மட்டுமே உறுப்பு மாற்று செய்வது டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி தானம் வேண்டுவோர் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தானம் கொடுப்பவர்களும் இதே போன்ற முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தேவையை பொருத்து உறுப்புகள் தானம் நடைபெறும்.இது டெல்லியில் நடைமுறையில் அமலில் இருந்தாலும் அப்பல்லோவில் இம்முறை பின்பற்றப்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
இத்தனைக்கு பிறகும்  போலியான ஆவணங்கள் மூலம் சிலர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி தனக்கு பொறுப்பில்லை என கையை விரிக்கிறது அப்பல்லோ. உலக தரம் வாய்ந்த அப்பலோவால்  பிரத்யேகமாக இரண்டு குழு அமைத்தும் போலி ஆவணத்தை கண்டறிய முடியவில்லை என்பது அதன் தரத்தை குறிக்கிறதா அல்லது அப்பல்லோ உண்மையை மறைக்கிறதா ? எதுவானாலும் அதற்கும் அப்பல்லோதான்  பொறுப்பேற்க வேண்டும். நடந்திருப்பது ஒரு கொள்ளை நாளை நோயாளிகளை கொலை செய்துவிட்டு மருத்துவர் போலி ஆவணத்தை கொடுத்து சேர்ந்த போலி மருத்துவர் என்று கூட இவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இப்படியான தரமற்ற வழிமுறைகளை(பிராசஸ்) கொண்டிருக்கும் மருத்துவமனை இது போன்று வேறு என்னென்ன குற்றங்கள் இழைத்திருக்கிறது அல்லது துணைபோயிருக்கிறது என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
பொதுவில் இது போன்ற கார்ப்பரேட் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளின் முறைகேடுகள் தவறுகள் வெளிவர அவர்கள் அனுமதிப்பதில்லை. இம்முறைகேடு பனிப்பாறையின் நுனி தான். தனியார்மயம் என்ற பனிப்பாறை உள்ளுக்குள் மறைந்திருக்கிறது.  குறிப்பாக மறுகாலனியக்கத்திற்கு பிறகு மருத்துவதுறை சேவை என்ற நிலையிலிருந்து மாறி பல மடங்காக லாப மீட்டும் தொழிலாகிவிட்டது. அது  ரியல் எஸ்டேட் போன்ற ஒரு தொழில். இதில் அறநெறிகளுக்கு இடமில்லை. அப்படி அறநெறியை எதிர்பார்ப்பதையே குற்றமாகவும்; சந்தையில் தலையிடுவதை மாபெரும் பாவம் என்கிறது புதிய தாராளமயாக்கல் கொள்கை. மருத்துவகல்லூரியிலிருந்து கார்ப்பரேட் மருத்துவமனை வரை கோலோச்சும் முதலாளித்துவ லாப வெறியின் தவிர்க்க முடியாத விளைவுகள் தான் இது போன்ற மோசடிகள்

மனித உடல் உறுப்புகளின் சந்தை! THE RED MARKET:

         மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
      நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.

உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை
உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை

ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.

எலும்புத் தொழிற்சாலை:

திருப்பதி
திருப்பதி பக்தர்களின் காணிக்கையான தலைமுடி. இவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகிறது
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
வாடகைத்தாய்கள்
குஜராத்தில் ஒரு வாடகைத்தாய் நிலையம். ஒன்பது மாதங்களும் இவர்களை கைதி போல பாதுகாக்கின்றனர். வெளிநாட்டினர் தரும் 14,000 டாலர்களில் இவர்களுக்கு 4000 டாலர் வருமானம் கிடைக்கிறது
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.

கிட்னிவாக்கம்:

கிட்னிவாக்கம்
ஓராண்டுக்கு முன்னர் 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்ற கலா இன்னமும் சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
கிட்னிவாக்கம்
சென்னை மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை நீக்கும் நெப்ரெக்டொமி அறுவை சிகிச்சை. 2006-2007 ஆண்டுகளில் கிட்னிவாக்கம் என்றழைக்கப்படும் சுனாமி முகாமில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தனது கிட்னிகளில் ஒன்றை விற்றுள்ளனர்.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.

இரத்த தானம்?

சுபாஷ்
சென்னை தெருக்களிலிருந்து 1999ல் காணாமல் போன தனது மகன் சுபாஷின் புகைப்படத்துடன் சிவகம்மா - நாகேஷ்வர் ராவ். தற்சமயம் சுபாஷ் அமெரிக்காவில் ஒரு கிறுத்தவ குடும்பத்தில் வளர்வதாக சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள்.
அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள்.
இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது.
இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா?
கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை  எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்!
இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார்.
அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும்  மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”.  அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான்.
பாத்திமா
தனது மகள் சபீனை ஒன்பதாண்டுகளாக தேடிய முயற்ச்சியில் திவாலாகிப்போன பாத்திமாவின் குடும்பம் தற்போது வண்ணாரப்பேட்டையில் வாழ்கிறது
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது.
ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது.

     

மனிதன் எனும் சோதனை எலி

இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான்.
ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை.
கோமதியின்-குழந்தை
கோமதி கருவற்றவேளையில் சைக்லோபமைன் (Cyclopamine) என்ற மருந்து அவர் மீது சோதிக்கப்பட்டதன் விளைவாக குழந்தை இப்படிப் ஊனமாக பிறந்ததாக கஸ்தூர்பா காந்தி மருத்துமனை ஊழியர்களால். சந்தேகிக்கப்படுகிறது. அம்மருந்து தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சோதிக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுப்பதற்கு ஓராண்டு முன்பாக மருந்து கம்பெனிகள் முறையற்ற வகையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நூற்றுக்கணக்கான பெண்களின் மீது சோதித்த்தாக தெரியவருகிறது. தற்போது இந்தியாவில் சைக்லோபமைன் விற்பனைக்கு கிடைத்தாலும், எந்த நிறுவனமும் அம்மருந்தை இங்கு சோதித்த்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை.
பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே  மையமாகக் கொண்டு இயங்கும்  வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது.
பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.
யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை?
முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? !