நாம் உண்ணும் உணவுகளின் மாறுபாட்டால் நோய்கள் உண்டாகின்றன .உணவு நஞ்சாகின்றன.அதுபற்றி அறிந்துகொள்வோம்.
உணவும் நோயும்
உணவும், உணவுப் பொருளும் உடலைப் பாதுகாக்கும் என்பது பொதுவான கருத்து. எந்த உணவு, எந்த உணவுப் பொருளோடு சேரலாம் என்றும், சேரக் கூடாது என்றும் தெரிவிப்பதும், உடல் நலனைப் பேணுகின்ற மருத்துவத்தின் கருத்தாகும்.
உணவு வகைகள் எதனை எதனோடு சேர்த்து உண்டால், உணவு நஞ்சு உருவாகும் என்பதைத் தெளிவு படுத்துகிறது சித்த மருத்துவம். உணவு முறைக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிகளைக் கடைப்பிடித்து விலக்க வேண்டியவற்றை விலக்கி வந்தாலே பெரும்பகுதி நோயிலிருந்து விடுபடுவதுடன் நோயற்ற வாழ்வும் வாழலாம்.
நஞ்சாகும் உணவு
1. வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை, செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்ணல்.
2. கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து உண்ணல்.
3. தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றை உண்ணல்.
4. அழுகிய கனிகள், திரிந்தபால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரைத்த உணவு, நூல்விட்ட உணவு ஆகியவற்றை உண்டால், கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்கச் செய்து, மரணத்தைத் தரும் நஞ்சாகும்.
5. ஆட்டு, மாட்டிறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளை கட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ–பலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும்.
6. மீன்கறி, கீரைக்கறி, முள்ளங்கி சேர்ந்த துணைஊண் (கூட்டு, சாம்பார்) ஆகியவையும், அதிக புளிப்புச் சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள், காட்டுப் பயறு (நரிப்பயறு, பாசிப்பயறு) ஆகியவை தனித்தோ சேர்ந்தோ உண்ட உடன், பால் அருந்தினால் நஞ்சாகும்.
7. பன்றி இறைச்சியுடன் முள்ளம் பன்றி இறைச்சியும், மான் இறைச்சியுடன் நாட்டுக் கோழி இறைச்சியும் தனியாகவோ, கலந்தோ தயிர் கூட்டி உண்டால் நஞ்சு.
8. உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும், குசும்பாக் கீரையுடன் செம்மறியாட்டின் இறைச்சி சேர்ந்தாலும் நஞ்சு.
9. கிச்சிலிப் பழத்துடன் பால், நெய், உளுந்து, வெல்லம் இவற்றில் ஒன்றிரண்டு கலந்தாலும் நஞ்சு.
10. மீன் சமைத்த சட்டியில் மணத்தக்காளிக் கீரை சமைத்தல், மீன் பொரித்த நொய்யில் திப்பிலியைப் பொரித்தல், பன்றிக் கொழுப்பில் நாரை இறைச்சி சமைத்தல், நஞ்சாகும்.
11. தேன், பசுவின் பால், நிணம், தண்ணீர் இவை நான்கும் சம அளவாக எடுத்துக் கலக்கி உண்டால் நஞ்சு.
12. சிட்டுக்குருவி, தித்திரிப்புள், காடை, மயில், உடும்பு இவற்றின் இறைச்சியை–ஆமணக்கு விறகு, எண்ணெயில் சமைத்தால் உடனே உடலை எமன் எடுத்துச் செல்வான்.
13. மஞ்சளைக் கடுகெண்ணெயில் வறுத்தல், நாரை இறைச்சியுடன் கள் குடித்தல், காராமணியுடன் நாரை சமைத்தல், தாமரை விதையுடன் தேனுண்ணல், தயிர் மோருடன் வாழைப்பழம் உண்ணல், பனம்பழத்துடன் வாழைப்பழம் உண்ணல், மணத்தக்காளிக் கீரையை இரவில் சமைத்துக் காலையில் உண்ணல் அனைத்தும் கடும் நோயைத்தரும் குற்ற உணவுகளாகும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல் நலனைப் பாதிப்படையச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும், விரிவாக உரைக்கப் பட்டுள்ளது.
இவற்றில், வெண்கலம், பித்தளை, தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, பழங்கள், இறைச்சி,குசும்பாக்கீரை, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது, அவ்வுணவு நஞ்சாகும் என்று உரைக்கப் பட்டிருக்கிறது. இவ்வகை உணவுப் பொருள்களும், பாத்திரங்களும் புளிப்புச் சுவையுடையவை எனத் தெரிய வருகிறது.
புளிப்புச் சுவை அதிக அளவு அல்லது மிதமான அளவு உணவில் கலக்கும் போது அவை நஞ்சாக மாறுகின்றன எனத் தெரிகிறது. அல்லது புளிப்புச் சுவையைத் தருகின்ற நச்சுப் பொருள் வேறு ஏதேனும் அவ்வாறான உணவில் கலந்தோ அல்லது கலப்பதினால் வேதியல் முறையால் புதியதாக உருவாகின்றதா என்பதும் தெரியவில்லை. இதனை, ஆய்வுக் கூட ஆய்வின் மூலம் சுவையால் ஏற்படுகின்ற உடல் நலனையும் பாதிப்பையும் கண்டறிய முனைய வேண்டும்.
No comments:
Post a Comment