Thursday, April 6, 2017

ஆடு, மாடு, கோழி... கொட்டிக்கிடக்கும் திட்டங்கள்... அள்ளிக் கொள்ள வாருங்கள்..!


கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை... ஆடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என கால்நடை சார்ந்த தொழில்களுக்கு மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கால்நடைச் சிறப்பிதழுக்காக... கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் இயக்குநர் ஆபிரகாமைச் சந்தித்துப் பேசியபோது அவர் பகிர்ந்தத் தகவல்கள் இங்கே...
விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள்!
2014-15-ம் ஆண்டில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நான்கு ஆடுகள் வீதம் 6 லட்சம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இதற்கு
198 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில் ஒருவருக்கு ஒரு மாடு வீதம் 12 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோழி அபிவிருத்தித் திட்டம்!
கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கறிக்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த கறிக்கோழி வளர்ப்பு, சங்கரன்கோவில் மண்டலம் (திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி), விழுப்புரம் மண்டலம் (பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம்) ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோழி வளர்க்கத் தேவைப்படும் கொட்டகை, உபகரணங்கள் ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பாக 50% மானியம் வழங்கப்படுகிறது. மாநில அரசின்

25 % மானியம், கொட்டகை அமைத்தவுடன் வழங்கப்படும். ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி வீதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோழிகளை வளர்க்கும் அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், தீவனங்கள் கொடுக்கப்பட்டு விடும். பயனாளிகள் 6 முதல் 8 வாரங்களில் வளர்த்துக் கொடுக்க வேண்டும். அதற்கான வளர்ப்புக் கூலி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.
நாட்டுக் கோழி வளர்ப்பு... திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர் ஆகிய 18 மாவட்டங்களில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழி வளர்க்கத் தேவைப்படும் கொட்டகை, உபகரணங்களுக்கு 50% மானியம் உண்டு (மத்திய அரசு 25%, மாநில அரசு 25%). ஒரு யூனிட்டுக்கு 250 கோழிகள். அதிகபட்சம் 2 யூனிட்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். கோழிகளை வளர்த்து, தனிப்பட்ட முறையில் விற்பனை செய்து கொள்ளலாம். ஏற்கெனவே, கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டிருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதில் ஒரு முறை பயன் பெற்றவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. இத்திட்டத்துக்கு மாநில அரசின் சார்பாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பசுந்தீவனம்!
மாநிலத்தின் மொத்த மேய்ச்சல் பரப்பளவு 1.10 லட்சம் ஹெக்டேர். வேகமான நகரமயமாக்கல் காரணமாக மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், பசுந்தீவன உற்பத்தியை ஊக்குவிக்க, 2014-15-ம் நிதியாண்டிலும்
25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தீவன விதைகள், தீவனப்புல் கரணைகள், உரங்கள் ஆகியவை 100% மானியத்தில் வழங்கப்படுகின்றன. நீர்த்தெளிப்பான், தீவனப்புல் நறுக்கும் கருவி ஆகியவை 75% மானியத்தில் வழங்கப்படுகின்றன. சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராம அளவில், தீவன வங்கிகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேய்ச்சல், மந்தை நிலங்கள் கண்டறியப்பட்டு அந்த இடத்தில், தீவன உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி செய்யப்படும் தீவனம், அந்தந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் மானிய விலையில் வழங்கப்படும். இத்திட்டம் மாவட்ட நிர்வாகம், ஊரக மேம்பாட்டு முகமையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். 2014-15-ம் ஆண்டில் 3 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காப்பீட்டுத் திட்டம்!
கால்நடைகள் இறப்பதினால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க, மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டம், தற்போது
15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில், 12 கோடி ரூபாய் மாநில அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு, சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையில் 50% அரசு மானியமாகவும், 50% கால்நடை வளர்ப்போரிடமிருந்தும் பெறப்படும்.
தடுப்பூசி!
கோமாரி நோய்க்கு மார்ச், செப்டம்பர் மாதங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகின்றன. இதோடு ஆட்டுக்கொல்லி, கன்று வீச்சு நோய்களுக்கான தடுப்பூசியும் போடப்படுகின்றன. அதற்கென அறிவிப்பு வரும் சமயங்களிலோ, நோய்க்கான அறிகுறி தென்படும்போதோ... உதவி கால்நடை மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாவட்டந்தோறும் உள்ள 2 ஆயிரத்து 500 உதவி கால்நடை மருந்தகங்கள் மூலம் செயற்கைக் கருவூட்டல் ஊசி போடப்படுகின்றன. ஒரு முறை கருவூட்டல் செய்ய, குறைந்தக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அரசு கால்நடைப் பண்ணைகள்!

கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் 13 அரசு கால்நடைப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. தரமான கலப்பினப் பசுக்கள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், நாட்டு மாட்டினங்கள், கோழியினங்கள் பராமரிக்கப்பட்டு மாதிரிப் பண்ணைகளாகச் செயல்பட்டு வருகின்றன. இதோடு, சலுகை விலையில் கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக பால் தரும் பொலிக் காளைகளின் விந்து உற்பத்தி நிலையங்கள், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலும் செயல்பட்டு வருகின்றன. இதோடு பசுந்தீவன புல் கரணைகள், விதைகள், மரத்தீவனக் கன்றுகளும் மானிய விலையில் பண்ணைகளில் வழங்கப்படுகின்றன. விவசாயிகள், தொழில்முனைவோர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள். கிராம அளவில் கால்நடை உதவி மருத்துவர், மாவட்ட அளவில் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குநர்களை அணுகலாம்'' என்ற ஆபிரகாம், பண்ணைகளில் கிடைக்கும் கால்நடைகளின் இனங்கள் மற்றும் பண்ணை முகவரிகளையும் பட்டியலிட்டார்.

No comments:

Post a Comment